செவ்வாய், 12 டிசம்பர், 2017

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!

கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசிரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தனியார் பள்ளிகளை போல, அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அடையாள அட்டை வழங்கும் நோக்கில் 2012ல், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது.தொழில்நுட்ப குளறுபடிகளால், பள்ளிகள் சார்பில், இணையதளத்தில் உள்ளீடுசெய்த, தகவல்களை திரட்டுவதில், சிக்கல் நீடித்தது.

இதற்காக நடப்பாண்டில்,மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணைய பக்கம் உருவாக்கி, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டு வருகிறது.இதில், கடந்த செப்., 1ம் தேதி நிலவரப்படி, அனைத்து வகை பள்ளிகளும், மாணவர் வருகை சார்ந்த தகவல்களை, உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதோடு, நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை திட்டங்களை இணைக்க, ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, பிரத்யேக மையங்கள் அமைத்து, பதிவு செய்யுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

இப்பணிகள் முடித்த பின், தகவல்களை ஒட்டுமொத்தமாக திரட்டுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, மாணவர்களின் அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில்,”அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

”ஸ்மார்ட் போன்களில், மாணவர்களை புகைப்படமெடுத்தால் போதுமானது. ஏற்கனவே வடிவமைத்த லே-அவுட்டில், புகைப்படத்திற்கான இடத்தில், மாணவர்களின் படம் பொருந்தி கொள்ளும். மாணவரின் பெயர், பள்ளி பெயர், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட, தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை தயாராகிவிடும்.

”இதுசார்ந்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, விரைவில் பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக