புதன், 23 ஆகஸ்ட், 2017

5000 ஆண்டு வரை தேதி சொன்னால் கிழமையை சொல்லும் சிறுவன்; இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்.

ஒன்று முதல் ஐயாயிரம் ஆண்டு வரை, தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் 13 வயது சிறுவனுக்கு, அபார நினைவாற்றலுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைசேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகம்மது பஹீம்,13. துபாயில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர். 

சிறுவயதில் உறவினர் வீட்டிற்கு சென்றால், அவர்களின் வீட்டில் உள்ள காலண்டரை பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த நிலையில், தற்போது ஒன்று முதல் 5000 ஆண்டு வரை, எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை கூறுகிறார்.

இதேபோல் உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் கூறுகிறார். எந்த நாட்டை கேட்டாலும், அதன் தலைநகர், கொடி, மொழி, நாணயத்தை கூறுவார். சர்வதேச எண் முறை, அனைத்து அலைபேசி நிறுவனங்களின் பெயர், மாடல், தயாரிப்பு தேதி, மென்பொருள் குறித்தும் கூறுகிறார்.

எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தின் பெயர், தேதி, நேரத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார். இவருக்கு, சிறந்த ஞாபக சக்தியாளர் என்ற முறையில், 5000 ஆண்டுகளுக்கான தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் திறனுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது. இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை இந்தியா சாதனையாளர் புத்தகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வழங்கினார். பின்னர் அந்த சிறுவன் கலெக்டர் நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக