வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு.

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.


இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.

மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப 
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.


திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு 
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.


''இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக