வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

இலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை.

இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும், மாணவ - மாணவியரை ஏற்ற மறுத்து, அவமதிக்கும் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட நிறுத்தங்களில், டிரைவர்கள், பஸ்களை நிறுத்தாமல் செல்வதாகவும், கண்டக்டர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, 'அரசு பஸ்களில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யாத ஊழியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், எச்சரித்து உள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது: பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரிடம், கண்டக்டர்கள் கனிவுடன் பேச வேண்டும்.அனைத்து நிறுத்தங்களிலும், அரசு பஸ்சை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். தகாத வார்த்தைகளை, கண்டிப்பாக பேசக்கூடாது. இதை மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த விஷயத்தில், 
மண்டல துணை மேலாளர் மற்றும் பஸ் நிலைய பொறுப்பாளர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை, 8:00 மணி முதல் 10:00 மணி வரை, கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், துணை மேலாளர்கள், அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட, பஸ் நிறுத்தங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக