வியாழன், 24 ஆகஸ்ட், 2017

‘நீட்’ தேர்வு பட்டியல் வெளியீடு மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு மீதம் உள்ள இடங்கள் 2 ஆயிரத்து 445 ஆகும். சுயநிதி மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு 3 ஆயிரத்து 534 இடங்கள் உள்ளன.

அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு 85 இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,198 இடங்கள் வருகின்றன.

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் முதல் முறையாக ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

வழக்கமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மருத்துவ தேர்வுத்துறை கலந்தாய்வு நடத்தப்படும். இந்த வருடம் கூடுதலாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த உள்ளது. இதற்காக தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையொட்டி 2 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர்களும், அவர்கள் ‘நீட்’ தேர்வில் எடுத்த மதிப்பெண்களும் வருமாறு:-

1. ஆர்.சந்தோஷ், டேங்க் ரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி (656 )

2. ஜி.முகேஷ் கன்னா, பொன்னையாராஜபுரம், கோவை (655)

3. இசட்.சையத் ஹபிஸ், மொரைஸ் சிட்டி, திருச்சி (651)

4. ஐஸ்வர்யா சீனிவாசன், பாலாஜி நகர், பெருங்களத்தூர், சென்னை (646)

5. டி.ஆர்.ஜீவா, வெங்கடரத்தினம் நகர், அடையாறு, சென்னை (645)

6. வி.தினேஷ், கீழ்வடுகன்குட்டை, கரசமங்கலம், காட்பாடி, வேலூர் (634)

7. ஏ.கபிலன், ராயல்நகர், தர்மபுரி (633)

8. ஜோனா மேரிராய், நொளம்பூர், சென்னை (631)

9. கே.அஷ்வின், கிருபை நகர், தூத்துக்குடி (630)

10. டி.ஆனந்த ராஜ்குமார், காமராஜர் நகர் காலனி, தம்பத்துக்கோணம், நாகர்கோவில் (630)

சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்த மாணவர்களில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களும், அவர்களின் ‘நீட்’ தேர்வு மதிப்பெண்களும் வருமாறு-

1. ஜெயி மிலிந்த் நாயக், ஸ்ரீநகர் காலனி, ஐதராபாத் (655)

2. கிரித்தின் மெகரோத்ரா, ஒயிட் பீல்ட்ஸ் ரோடு, கொண்டபூர், ஐதராபாத் (650)

3. பரினிதி கிலான், ரோஸ்வுட் சிட்டி, கிராண்ட் மேன்சன், குர்கான் (645)

4. அன்சா சாரா சாஜி, கொல்லஞ்சேரி, ஈ.கே.எம்.மாவட்டம், கேரளா (645)

5. அதுல் மேத்யூ ஜீவன், திருவல்லா, கேரளா (639)

6. ஜோன்னா மேரி ராய், நொளம்பூர், சென்னை (631)

7. சேதி ஆகாஷ், புனித்நகர், பரோடா, குஜராத் (629)

8. ரியா ஆன் பிலிப், திருவனந்தபுரம், கேரளா (618)

9. எல்தோ பி.இலியாஸ், தொக்குபாரா, கேரளா (608)

10. பிரனீத் எர்னேனி, பிரஜாசக்தி நகர், விஜயவாடா (605).

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2017-18ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து 31 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 27 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை. இந்த விண்ணப்பங்களில் 3-ம் பாலினத்தை சேர்ந்த ஒருவரது விண்ணப்பமும் அடங்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் இருந்து 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றுக்கு 358 விண்ணப்பங்கள் வந்துள்ளன. முன்னாள் ராணுவ வீரர்கள் பிள்ளைகளுக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு பல் மருத்துவ இடமும் உள்ளது. இதற்கு 471 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மொத்த விண்ணப்பங்களில் மாநில அரசு கல்வித்திட்டத்தில் படித்தவர்கள் 27 ஆயிரத்து 458 பேர் ஆவர். மத்திய அரசு கல்வித்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்தவர்கள் 3 ஆயிரத்து 418 பேர். ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 207 பேர். பழைய மாணவர்கள் 5 ஆயிரத்து 636 பேர்.

சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்தவர்கள் 20 ஆயிரத்து 244 பேர் ஆவர். அவர்களில் தகுதியானவர்கள் 18 ஆயிரத்து 40 பேர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கு சென்னை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்தாய்வு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 48 பேர் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் அதிகம் சேர்வார்கள் என்ற கருத்து நிலவியது. ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த 2 ஆயிரத்து 224 பேருக்கும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி வாரியத்தில் படித்த 1,310 பேருக்கும் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக