சனி, 16 செப்டம்பர், 2017

ஆசிரியர்கள் நிலைமை...

கரும்பலகையில்
கைபதித்து...
சுண்ணாம்புத்தூளை
தினம்
சுவாசித்து...

கற்றுக்கொடுத்து
கற்றுக்கொடுத்து
காற்றை இழந்த
ஆசிரியர்
இதயத்தில்
இன்னும்
இருக்கிறது வலி...


மாணவன்
மண்ணாகிப்போவானோ
என்றெண்ணி
கண்டித்த ஆசிரியரை
தண்டித்த சமூகம்...

வழி காட்டிய
மனிதனுக்கு
வலி ஊட்டிய
சமூகம்...

ஆசிரியர்கள்
ஏணிப்படிகள்
என்பதால்தான்
என்னவோ
எல்லோரும்
ஏறி மிதிப்பார்கள் போலும்...

மரியாதைக்குரிய
ஆசிரியரை
அவமரியாதைக்கு
ஆளாக்கும்
ஆணவ சமூகம்...

காக்க வேண்டிய
கடவுளை
தாக்க வேண்டிய
அவசியம்
எப்படி வந்தது?

கத்தி கத்தி
கற்பித்த குற்றத்திற்கு
கத்திக்குத்துதான்
பரிசா?

மாணவனை
மகனாகப் பார்க்கும்
ஆசிரியரை
எதிர்வினையாக்கி
எதிர்த்துப்பேசும்
சமூகம்.

சிற்பி
கல்லை
காயப்படுத்துவதாய்
கருதி
சிற்பியை காயப்படுத்தினால்
சிலை எப்படி
கிடைக்கும்.

மாணவனை
செதுக்க நினைக்கும்
ஆசிரியரை
தண்டித்தால்
நல்ல
சமூதாயம்
எப்படி கிடைக்கும்?

காலையில்
பள்ளிக்கு ஆசிரியராய்
சென்று
மாலையில்
வீட்டிற்கு
அப்பாவாய்
அம்மாவாய்...
திரும்புவதே
சவாலானதே!

பள்ளியில்
மாணவனை
திட்டிவிட்டு
படுக்கையில்
உறங்காமல்
கிடப்பவனே
இன்றைய ஆசிரியன்...

ஒருபுறம்
தேர்ச்சிக்கான நெருக்கடி
மறுபுறம்
ஒத்துழைக்க மறுக்கும்
மாணவனின் தேள்கடி...
நடுவில்
காயம்பட்ட ஆசிரியன்...

ஆனால்...

ஆசிரிய நண்பரே !!!

ஆண்டிற்கு
ஒரு தினம்
அது
ஆசிரியர் தினம்...

அன்று மட்டும்
வாழ்த்துக்கள்
வந்து வந்து
குவியும்...

இன்று  மட்டுமே
போற்றப்படுவோம்
இனி எப்போதும்
தூற்றப்படுவோம்...

இன்று
அறப்பணி
அர்ப்பணி
என்பார்கள்...
நாளை   நம்மை
பலியிட
அர்ப்பணிப்பார்கள்...

இன்று
சமூக சிற்பி
என்பார்...
நாளை
சமூக எதிரி என்பார்...

இருந்தாலும்
இறந்தாலும்
ஆசிரியராய் இருப்போம்...

கற்பித்தலை
கடமை யோடு
செய்யும்...

 கல்விக்கடவுளாய்
 எப்போதும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக