சனி, 16 செப்டம்பர், 2017

அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.

எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.

காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?

எதிர் முனை : தெரியும் சார்.

காவலர் : யார் சுட்டது?


எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?

எதிர் முனை : சுட்டாங்க சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : உங்கள் பேர் என்ன?

எதிர் முனை : சாரதி சார்.

காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க

கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.

அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?

அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.

ஒருவரைப் பார்த்து காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?

பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.

காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.

பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.

இன்னொருவரைப் பார்த்து காவலர் : அப்பா நீ யாருயா?

சாரதி (போனில் பேசியவர்):  நான் தான் பார்த்த சாரதி.

கடுங்கோபத்தில் காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?

சாரதி : இல்ல சார்.

காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.

சாரதி : ஆமா சார்.

காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?

சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .

காவலர் : அப்ப உன் பேரு என்ன?

சாரதி : சாரதி சார்.

காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?

சாரதி : ஆமாம் சார்.

பார்த்த சாரதியப் பார்த்து

காவலர்  : அப்ப நீங்க

பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.

சாரதியைப் பார்த்து

காவலர் : போன் செய்தது நீ தானா?

சாரதி : ஆமாம் சார்.

காவலர் : சுட்டது யார்?

சாரதி : "மூன்றாம் நபரைக்  காட்டி" இவர் தான் சார்.

மூன்றாம் நபரைப்  பார்த்து

காவலர் : நீ யாரு?

3ம் நபர் : நான் சுடலை சார்.

சாரதியைப் பார்த்து காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.

சாரதி :  ஆமாம் சார் அவர் சுடலை.

காவலர் : அப்ப சுட்டது யாரு?

சுடலையைக் காண்பித்து சாரதி : இவர் தான் சார்.

காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக