வெள்ளி, 22 செப்டம்பர், 2017

'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு.

''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை பல்கலை, நுாற்றாண்டு விழா கலையரங்கில், 2,315 முதுகலை ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பாசிரியர்களுக்கும், பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், தேசிய விருது பெற்ற, 22 ஆசிரியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 438 கோடி ரூபாய் செலவில், 3 ஆயிரத்து, 90 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தலா, 10 கம்ப்யூட்டர்கள்; 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தலா, 20 கம்ப்யூட்டர்கள் மற்றும் இதர சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.கல்வி வளர்ச்சிக்கு, சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு, 'புதுமைப் பள்ளி' விருது வழங்கப்பட உள்ளது.மாவட்டத்திற்கு தலா, 4 பள்ளிகளுக்கு, இந்த விருது வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல், கம்ப்யூட்டரை பயன்படுத்தி, சிறந்த முறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், கல்வி இணை செயல்பாடுகளில், சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் என, மாவட்டத்திற்கு தலா, ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

கிராமப்புற மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் வாயிலாக, பாடங்கள் கற்பிக்க, முதல் கட்டமாக, 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 'ஸ்மார்ட் வகுப்பறை' ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும், யோகா வகுப்புகள் துவக்கபடும். மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கம், பண்பு, பொது அறிவு, ஆன்மிகத்தையும் போதிக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ள கூடிய திறமையை, மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாணவர்களுக்கு, எதில் திறமை உள்ளது என்பதை கண்டறிந்து, அதில், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பாடங்களை மட்டுமின்றி, தேசபக்தி, பொது அறிவு,நல்ல பண்புகளை போதிக்க வேண்டும்.சில மாணவர்கள் செய்யும் சேட்டைகளை, பெரிதுபடுத்தகூடாது. 
மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, உரிய விளக்கங்களை, பொறுமையுடன் கூற வேண்டும். நாங்கள் படிக்கும் போது, இரண்டு விளையாட்டு வகுப்பு உண்டு. அது, தற்போது குறைந்துள்ளது. 

மாணவர்கள், உடல் நலத்தோடு இருக்க, விளையாட்டும் அவசியம். உடல் நலத்திலும், கவனம் செலுத்த வேண்டும்.ஆசிரியர்கள், திறமை மிக்கவர்களாக, தங்களை வளர்த்து கொண்டது போல், இன்றைய மாணவர்களை, நாளைய ஆசிரியர்களாக, டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக,எங்களை போன்ற அரசியல்வாதிகளாக,நல்ல அரசியல்வாதிகளாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசுகையில், ''அரசு வெளி படைத்தன்மையோடு நடந்து வருகிறது. ஆசிரியர் பணி மாறுதல், வெளிப்படை தன்மையோடு நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் தேர்வு முடிவு, தற்போது, 40 நாட்களில் வெளியிடப்பட்டது. 

வழக்கு இல்லாமல் இருந்திருந்தால், 30 நாட்களில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கும்,'' என துணை முதல்வர்,பன்னீர்செல்வம் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக