வியாழன், 21 செப்டம்பர், 2017

ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது : சென்ட்ரலிலும் வருது புது நடைமுறை.

ரயில்வேயில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் அதே நேரம், சிக்கன நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல் உட்பட, ஆறு ரயில் நிலையங்களில், முன்பதிவு பட்டியலை, ரயில்களில் ஒட்டும் நடைமுறை, விரைவில் கைவிடப்படுகிறது.

பயணியர் வசதிக்காக, ரயில்வேயில், நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன; அதே நேரம், சிக்கன நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்வோரின் விபர பட்டியலை, ரயில்களில் ஒட்டும் நடைமுறை விரைவில் கைவிடப்பட உள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக, டில்லி நிஜாமுதீன், சென்னை சென்ட்ரல், மும்பை சென்ட்ரல், சி.எஸ்.டி., உள்ளிட்ட ஆறு நிலையங்களில், ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டுவது ரத்து செய்யப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில், முதல்கட்டமாக, சென்னை சென்ட்ரலில், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. முன்பதிவு செய்த பயணியருக்கு, ரயில் எண், பெட்டி எண், படுக்கை மற்றும் இருக்கை எண் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும், மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., ஆக, அனுப்பப்படும்.


அதேநேரம், மொபைல் போனை தவறவிட்டோர், மொபைல் போன் பயன்படுத்தாதோர், முதியோர் பயன்பெறும் வகையில், ரயில் நிலையத்தின் முன்பகுதியில், முன்பதிவு பட்டியல் ஒட்டப்படும்; சிறப்பு தகவல் மையத்திலும், தகவல்களை தெரிந்து கொள்ளலாம். எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பு, விரைவில் வெளியாகும். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் மட்டும், முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணிக்காக, ஒப்பந்ததாரருக்கு, ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த செலவு, இனி ரயில்வேக்கு மிச்சமாகும்.
ஏற்கனவே, பெங்களூரு, யஷ்வந்த்பூர் நிலையங்களில், ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டுவது சோதனை ரீதியாக கைவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக