சனி, 11 மார்ச், 2017

ஞானி கதை. . .

ஒரு முறை சிலர் அவரிடம் சென்று நாங்கள் அரித்துவார், காசி எல்லாம் சென்று புனித கங்கையில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...

ஞானியோ, இப்போது வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயைத் தந்து, ''எனக்காக ஓர் உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராசா..." என்றனர்.

''ரொம்பப் பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் கங்கையில் முழுகும் போதெல்லாம் இந்தப் பாகற்காயையும் குளிப்பாட்டி என்னிடம் திரும்பக் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்னமாதிரியே செய்தனர்..

திரும்ப வந்து அவரிடம் அந்தப் பாகற்காயைப் பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்தப் பாகற்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒவ்வொரு துண்டுகளாகக் கொடுத்தார். ''கங்கையில் முழுகி வந்த பாகற்காய்.. இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும்" என்றார்...

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் அதனைத் துப்பினார்கள்...

தித்திக்கும்னிங்க
 கசக்குதே....
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..

"பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் கங்கையில் முழுகி குளித்தாலும் அதன் இயல்பான சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே
 நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்தத் தீர்த்தத்தில் முழுகினாலும் என்ன பயன் வந்து விடப் போகிறது?" ... என்றாராம்.   சிந்தியுங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக