வெள்ளி, 24 மார்ச், 2017

நா.... ஒரு அற்புத பொருள்.

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மணம் முடிக்க போட்டி போட்டவர்களிடம்
" நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.

மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.

வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து
 நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.

சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் மனிதனின் நாவு
தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது .

குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள்.

நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
கலைவாணி குடியிறுப்பு நாவில் என்று வேதம் கூறுகிறது .
மனிதனை தேவன் ஆக்குவது குருவின் அருள் நா
அன்றோ .
ஆகவே அதுவே இனிமையான பொருள் என்றான் .

குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார் .
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.

குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதனுள் மனிதனின் நாவு
தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது .

குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் , நாவை
வரைந்து  கொண்டு வந்தாய்.
கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை வரைந்து கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?"
என்று  கேட்டார்.

சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான்.  மனிதன் அழிந்துபோகிற உலகத்தைப் பற்றியே பேசி ,
கடைசியில்  கசப்பு ஜல தீட்டு வெளியாகி ,
மரணம் அடைகிறான் .
 எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.

சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மணம் முடித்துக் கொடுத்தார்.

நா....
ஒரு அற்புத பொருள்.
சொர்கத்தின் திறவுகோலும் அது தான்.
நரகத்தின் வாசல்படியும் அது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக