வெள்ளி, 24 மார்ச், 2017

பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு.

பேப்பர் தட்டுப்பாடு காரணமாக 'நோட் புக்' விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.சிவகாசியில் தயாராகும் நோட்டுகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. பாட நோட் தயாரிப்பில் 20 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு ஈடுபட்டுள்ளன. 

மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தேவையான நோட்டுகள் இங்கே தயாரிக்கின்றனர். இந்தாண்டு வரலாறு காணாத வகையில் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி முடக்கம் : நோட்புக் தயாரிப்பிற்கு பயன் படுத்தப்படும் மேப்லித்தோ, கிரிமோ பேப்பர் கடந்தாண்டு டிசம்பர் வரை ஓரளவிற்கு வெளிமாநில தனியார் மில்களிலிருந்து வரத்து இருந்தது. பிப்ரவரி, மார்சில் வரத்து சுத்தமாக இல்லை. பாராக்பூரில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவன பேப்பர் மில் உள்ளிட்ட இதர மில்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இதன் தாக்கம் பேப்பர் உற்பத்தியை அடியோடு முடக்கி உள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசின் டி.என்.பி.எல்., நிறுவனமும் தண்ணீர் பற்றாக்குறையால் பேப்பர் உற்பத்தியை குறைத்து விட்டன. இதனால் வரலாறு காணாத வகையில் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு டன்னிற்கு மாதம் 2 ஆயிரம் வரை பேப்பர் விலை ஏற்றம் பெற்று வருகிறது. இருந்தாலும் நோட்புக் அச்சடிக்கும் ஆலைகள் நிலையை சமாளிக்க பேப்பரை வாங்கி உற்பத்தியில் ஈடுபடுகின்றன .

பன்மடங்கு உயரும் : நோட் தயாரிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் பேப்பர் விலை உயர்வு ஏற்ப பள்ளி, கல்லுாரிகளில் ஆர்டர் பெற்று தயாரிப்பை துவக்குகின்றனர். ஆனால் இங்கு முதலுக்கே மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சிறிய நோட்புக் தயாரிப்பாளர்கள் உற்பத்தியை கைவிட்டு ஆலையை பூட்டும் நிலைக்கு வந்துவிட்டனர். பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கும் ஸ்டாக் பேப்பரை வைத்தே ஆர்டர் எடுத்து உற்பத்தியை நடத்தி வருகின்றன.இதனால் தற்போதைய நிலவரப்படி நோட்புக் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளி திறக்கும்போது நோட்புக்கின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கும். இதற்கு உரிய தீர்வாக வெளிமாநிலங்களில் இருந்து பேப்பர் வரத்தினை அதிகப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாதம் ஒரு விலை : சீமா நோட்புக் தயாரிப்பாளர் மாரிராஜன் கூறுகையில், “ வெளிமாநில தனியார் மில்களில் இருந்து பேப்பர் அனுப்புவதை நிறுத்தி விட்டனர். இதற்கு மூலப்பொருள் தட்டுப்பாடும் ஓர் முக்கிய காரணம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றால் நம் நாட்டின் உற்பத்தி தரம் அங்கு இல்லை. தட்டுப்பாடு காரணமாக பேப்பரின் விலை மாதம் ஒரு விலைக்கு ஏற்றம் பெறுகிறது. வாங்கும் விலை , உற்பத்தி செலவுக்கே கட்டுபடியாகாத நிலையால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, ” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக