புதன், 6 டிசம்பர், 2017

போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை.

'அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 

தமிழகம் முழுவதும், 100 மையங்களில், இலவச பயிற்சி துவங்கப்பட்டது.
இந்த மையங்களின் எண்ணிக்கை, 500 ஆக உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு, பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், போட்டி தேர்வு பயிற்சி மையம், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் இருந்து, வெகு தொலைவில் உள்ளது.


அதனால், மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, போட்டி தேர்வு பயிற்சி திட்டம், கண்துடைப்பாக இல்லாமல், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். எனவே, கூடுதலாக பயிற்சி மையங்களை துவங்க வேண்டும் என்றும், அவை, பள்ளிக்கு அருகில் அமைய வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக