வெள்ளி, 1 டிசம்பர், 2017

ரயில் வரும் நேரத்தை அறிய ஜி.பி.எஸ்!!!

ரயில் வரும் நேரத்தைத் துல்லியமாக அறிய எஞ்சினில் ஜி.பி.எஸ். கருவி அடுத்த ஆண்டு பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் அதிக தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர். ஆனால் ரயில் பல சமயங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை. ரயில் நிலையத்திற்கு ரயில் எப்போது வரும் என்பது பயணிகளுக்குச் சரியாகத் தெரிவதில்லை.

இந்நிலையில், இதற்கான புதிய தொழில்நுட்பத்தை ரயில்வே துறையினர் அமல்படுத்தவுள்ளனர். Real-time Punctuality Monitoring and Analysis என்ற முறை அறிமுகமாக உள்ளது. அதன்படி ஜி.பி.எஸ். கருவியானது ரயிலில் என்ஜினில் பொருத்தப்படும். அதனோடு பொருத்தப்படும் ரியல் டைம் கருவியால் ரயில் ஒரு குறிப்பிட்ட நிலையத்துக்கு வரும் நேரம் துல்லியமாகப் பயணிகளுக்குத் தெரிய வரும்.

இந்த முறையானது அடுத்த ஆண்டு முதல் டெல்லி-ஹவுரா மற்றும் டெல்லி-மும்பை வழித்தடங்களில் செல்லும் ரெயில்களில் நடைமுறைப் படுத்தப்படும். அதன் பின்னர் நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புதிய கருவியானது உத்தரப் பிரதேசம் மாநிலம் முகல்சாரை ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த முறையைப் பயன்படுத்தி ஓட்டுநர் ரயிலை வேகமாக ஓட்டினாலோ, தாமதமாகப் புறப்பட்டாலோ, அவசியமில்லாத இடங்களில் நின்றாலோ அல்லது சிக்னலில் நின்றாலோ எளிதாகக் கண்டறிய முடியும் என்று இது குறித்து முகல்சாரை ரயில்வே மேலாளர் கிஷோர் குமார் கூறினார். 5 ஓட்டுநர்கள் இந்த முறையில் சோதனை ஓட்டத்தில் 1 க்கு 9 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக