செவ்வாய், 27 ஜூன், 2017

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு கல்விச்சான்றிதழில் பெயரை மாற்றி கொடுக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் கவுதம் சுப்ரமணியம் என்பவர் தாக்கல் 
செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நான், பெண்ணாக பிறந்தேன். ரேகா கலியமூர்த்தி என்ற பெயரில் 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2012–ம் ஆண்டு கணினி 
அறிவியியலில் பட்டம் பெற்றேன். எனது உடலில் பெண்மைக்கான 
அடையாளம் மாறி, ஆண்களுக்கான ஹார்மோன் வளர்ச்சி 
இருந்ததால் ஆண்களை போன்று செயல்பட்டேன்.

இதன்பின்பு, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 
ஆணாக மாறினேன். இதைதொடர்ந்து என் பெயரை கவுதம் 
சுப்ரமணியம் என மாற்றிக்கொண்டு தமிழக அரசின் அரசிதழிலும்
 பதிவு செய்தேன்.
இதன்பின்பு, என் கல்வி சான்றிதழ்களில் உள்ள ரேகா கலியமூர்த்தி 
என்ற பெயரை, கவுதம் சுப்ரமணியம் என்று மாற்றிக்கொடுக்கும்படி 
அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர், 
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு 18.1.2017 
அன்று அனைத்து ஆவணங்களுடன் மனு அனுப்பினேன்.
ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே, எனது பெயரை கல்வி சான்றிதழ்களில் மாற்றிக்கொடுக்க 
பள்ளிக்கல்வித்துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் 
உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் 
விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் 
கல்வி சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ரேகா கலியமூர்த்தி 
என்ற பெயரை அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர், 
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் கவுதம் சுப்ரமணியம் என்று 
மாற்றி 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக