சனி, 24 ஜூன், 2017

அரசு ஒப்பந்த டாக்டர்களுக்கு ஆதார் இனி கட்டாயம்!!!

அரசு ஒப்பந்த டாக்டர்கள், இனி ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர், பானு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், முதுநிலை மருத்துவம் படிப்போர், இரண்டு ஆண்டுகள், கிராமப்புற அரசு  மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். ஆனால், படிப்பை முடிக்கும் அரசு சாரா டாக்டர்கள், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில், ஓரிரு மாதங்கள் பணியாற்றி விட்டு, அரசுக்கு, 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். மேலும், பணியில் சேரும்போது, போலியான முகவரியை கொடுப்பதால், அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை.
இந்தாண்டு மட்டும், ஒப்பந்தத்தை மீறியதாக, 600க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்ககம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அதில், 10 பேர் மட்டும் பணிக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் பணிக்கு திரும்பாமல், அரசின் நோட்டீசை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில், ஒப்பந்த டாக்டர்கள் பணியில் சேரும் போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர், பானு கூறியதாவது: முதுநிலை மருத்துவம் படித்த டாக்டர்கள், 40 லட்சம் ரூபாயும், டிப்ளமோ படித்த டாக்டர்கள், 20 லட்சம் ரூபாய் செலுத்தி, ஒப்பந்தத்தை முடித்து கொள்ள முடியும். ஆனால், பலர் ஒப்பந்தப்படி பணி செய்வதில்லை; ஒப்பந்த தொகையும் செலுத்துவதில்லை. பலர் கொடுக்கும் முகவரி, போலியாக உள்ளது. எனவே, ஒப்பந்த டாக்டர்கள், நியமன ஆணையுடன், ஒப்பந்த பத்திரம் மற்றும் ஆதார் நகல் சான்று சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒப்பந்தத்தை மீறுவோரை, எளிதாக அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக