செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 5–ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் சம்பளதாரர்கள், தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத சிறிய வியாபாரிகள், எல்.ஐ.சி. முகவர்கள், கமி‌ஷன் ஏஜெண்டுகள் போன்றவர்கள் 2016–2017–ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, சென்னையில் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக வழக்கம் போல், சென்னை நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள கவுண்ட்டர்களில் ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர். இதே போன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள சேவை மையம் மற்றும் தாம்பரத்தில் உள்ள சேவை மையங்களிலும் திரளானவர்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஏராளமான பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்–லைன் மற்றும் வருமான வரி அலுவலகங்களுக்கு வந்து இணைத்து வருகின்றனர். தற்போது கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்று வரும் 31–ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும் நேற்று கடைசி நாள் என்பதால் சென்னை நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவருடைய கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

கணக்கு தாக்கல் செய்ய வருபவர்களின் நலன் கருதி கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான விடுமுறை நாட்களிலும் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டது. இதில் சென்னையில் நூற்றுக்கணக்கான பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அளவுக்கு அதிகமானோர் வருமான வரி அலுவலகத்துக்கு வந்து கணக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வருமான வரி கணக்கை மின்னணு மூலம் தாக்கல் செய்ய வருகிற 5–ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தணிக்கை கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக