வியாழன், 13 ஜூலை, 2017

புதிய பிளஸ்-1 அரசு தேர்வுக்கு மாதிரி கேள்வித்தாள் தயாரிப்பு.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு (2017-18) பிளஸ்-1 தேர்வை அரசு பொதுத் தேர்வாக மாற்றியுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் மட்டும்தான் பொதுத்தேர்வாக இதுவரையில் இருந்தன.

இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவ - மாணவிகளும் பொதுத் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடத் திட்டத்தை படிக்காமல் 2 ஆண்டுகளும் பிளஸ்-2 பாடத் திட்டத்தை படிக்கும் நிலை இருப்பதால் மாணவர்களுக்கு பிளஸ்-1 பாடங்கள் நடத்துவது இல்லை. இது உயர்கல்விக்கு செல்ல தடையாக உள்ளது.

இதையறிந்து பள்ளிக் கல்வித்துறை இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பொதுத் தேர்வை சந்திக்க வேண்டும்.

இந்த புதிய திட்டம் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் இனி 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவார்கள். இதுவரையில் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண் அடிப்படையில் 6 பாடத்திற்கு 1200க்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டது. பொதுத் தேர்வாக மாற்றியதன் மூலம் ஒவ்வொரு பாடமும் 100 மதிப்பெண்ணாக குறைக்கப்படுகிறது.

இதில் 90 மதிப்பெண்ணிற்கு எழுத்து தேர்வு எழுத வேண்டும். 10 மதிப்பெண் வகுப்பறை தேர்வாக நிர்ணயிக்கப்படுகிறது. செய்முறை தேர்வு உள்ள பாடங்களுக்கு எழுத்து தேர்வு 70 மதிப்பெண்களும், 20 மதிப்பெண் செய்முறை தேர்விற்கும், 10 மதிப்பெண் வகுப்பறை தேர்விற்கும் ஒதுக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் பிளஸ்-1 மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் வ.தேவராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பாடத்திட்ட குழுவினர் புதிய மாதிரி வினாத்தாள் தயாரித்து கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில குழுவிற்கு அனுப்பியுள்ளது.

இந்த மாதிரி வினாத்தாள் மூலம் மாடல் தேர்வு நடத்தப்பட்டு அதில் ஏற்படும் விளைவுகளை குழுவினர் ஆய்வு செய்கிறார்கள்.

இதுகுறித்து மாநில குழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அறிவொளி கூறியதாவது:-

பிளஸ்-1 அரசு தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படுவதற்கு முன்பாக மாடல் தேர்வு ஒன்று நடத்தப்படும். 100 மதிப்பெண்களுக்கு 2½ மணி நேரத்தில் தேர்வு எழுதக்கூடிய வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் மாணவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடிகிறதா? சிரமப்படுகிறார்களா? குறைக்கப்பட்ட நேரம் போதுமானதாக இருக்கிறதா? என்பதை பார்த்துதான் வினாத்தாள் மாதிரியை இறுதி செய்வோம். சிரமம் இருக்குமானால் மாற்றம் செய்வோம்.

இந்த தேர்வை தெரிவு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் எழுதுவார்கள்.

வினாத்தாளில் 3 வகையான வினாக்கள் இடம் பெறும். அறிவு சார்ந்த கேள்விகளும், புரிந்து கொள்ளும் வகையிலான கேள்விகளும் அப்ளிகே‌ஷன் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய முறையில் தயாரிக்கப்படும் வினாத்தாளுக்கு 100-க்கு 100 மதிப்பெண் பெறுவது சிரமமாக இருக்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக