ஞாயிறு, 30 ஜூலை, 2017

==== கீதம் நீ ====

நீ இருக்கும்
ஊரில்தான்
நானும் இருக்கிறேன்

உனக்கு விடிவதுபோல்
எனக்கு விடியல் இல்லை

அன்று -

பத்துநிமிட தாமதத்திற்கு
பதறிபோன இதயம்


நில்லென்ற சைகைக்கு - நீ
நிற்காமல் போன கோபம்

பேசாதே என்றவரிடம் - நீ
பேசியதால் வந்த வேகம்

காத்திருந்த இடத்திற்கு  - நீ
வராமல் போன தாகம்

எனை கண்டு அதிக சிரிப்பை - நீ
அடைக்கிக் கொண்ட சோகம்

வாழ்வின் முதலாம் பாகம்
முடிந்து விட்ட வயதில்

இன்று -

ஒருசில நிமிடம்
உன்னை கடந்து
நானும் போகிறேன்

பதட்டமில்லை
பார்வைக்குள்ளே - பழைய
பாஷையில்லை

சத்தியம் செய்த
வார்த்தைகளுக்கு - ஒன்றும்
சக்தியில்லை

நடையிலே
கோபம் சொல்வாய்

உடையிலே
சோகம் சொல்வாய்

யாருமில்லா வேளையிலே
ஆசை சொல்வாய்

எங்கு சென்றாலும்
என்னை மட்டும் பார்த்து
செல்வாய்

இன்று
உறவு பெருக்கிப்போய்
ஓய்வில்லா ஓட்டமாய்

வீடு வாசல் கோழியென
தலைக்குமேலே வேலைகள்

ஆட்டுமாட்டுக்கு புல்லும்
அடுப்பெரிக்க விறகுமாய்

ஆயுளை கடத்தி செல்லும்
அன்பு உடன்படிக்கை

அன்று
காவியம் சொன்ன
அனிச்ச மலர் விழிகளுக்குள்

அழுகையும் கண்ணீரும்
பாதிபாதியாய் பங்கிட்டு

துவைக்க
நேரமில்லா துணிகள்
வகிடெடுக்கா கூந்தல்
பூப்பூக்கா பின்னல்

வைத்த பொட்டை பார்க்காமல்
வாசனை தூள் பூசாமல்

அத்தனையும் விட்டு
பெற்றுக்கொண்ட வாழ்வின்
பெருமிதந்தான் என்ன ?

நதியோடு கடல்சேரும் சருகாய்
விதியோடு நடைபோடும்
வெளிச்சமற்ற இரவு

நான்
விழித்து கொண்டிருக்கிறேன்

பாவம் - நீ
தூங்கிக் கொண்டிருக்கிறாய்

அந்த கீதம் மட்டும்
தூரத்து புல்லாங்குழலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக