வெள்ளி, 16 ஜூன், 2017

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் 89 புதிய பாடப்பிரிவுகள் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு.



தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க் கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி பணி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எம்.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், எம்.இ. அப்ளைட் எலக்ட்ரானிக்ஸ், எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங் ஆகிய 3 புதிய முதுகலை பாடப் பிரிவுகள் 2017-18-ம் கல்வி ஆண்டில் இருந்து அறிமுகம் செய்யப்படும்.

புதிய பாடப்பிரிவுகள்

அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் கட்டிடவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், எந்திரவியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய பட்டயப் பாடப் பிரிவு மாணவர்கள், எங்கும், எந்நேரமும், எதையும் கற்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி பன்முக ஊடக ஆய்வு மையத்தின் மூலமாக 36 பாடங்களில், ஒரு பாடத்திற்கு 20 மின் கற்றல் ஒளித்தொகுதிகள் என்ற அடிப்படையில் 720 மின் கற்றல் ஒளித்தொகுதிகள் தயாரிக்கப்படும்.

2017-18-ம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 42 இளங்கலை, 47 முதுகலை புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.

திறன்தரம் உயர்த்துதல் திட்டங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் தொடங்கப்படும். அழகப்பா பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புற சூழல் அமைவதற்கு கழிவு தூய்மைப்படுத்துதல் தொழில் நுட்பம் கையாளப்படும். அங்கு திறன் வங்கி மையம் தொடங்கப்படும்.

தாட்கோ மூலமாக ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் திறன் தரம் உயர்த்துதல் திட்டங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு சான்றிதழ்

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவு மையத்திற்கு கட்டிடம் கட்டுதல் மற்றும் பிற வசதிகள் செய்து தரப்படும்.

தன்னாட்சி பெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு உயர்கல்வி மாநில மன்றத்தின் தொழிற்துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பிற்கான வரையறைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக