ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு தொடக்கம்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு இன்று (அக்டோபர் 28) காலை தொடங்கியது.
சென்னையில் மூன்று மையத்தில் 763 பேர் உட்பட நாடு முழுவதிலுமுள்ள 24 மையங்களில் 13,350 பேர் மெயின் தேர்வை எழுதியுள்ளனர். இன்று தொடங்கிய இத்தேர்வு நவம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும்.
ஜூன் 18ஆம் தேதி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் வகையில் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல்நிலைத் தேர்வெழுதினர். அதில் தமிழகத்திலிருந்து 763 பேர் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து 13,350 பேர் மெயின் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றனர்.

மெயின் தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி, மெயின் தேர்வு இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் 763 பேர் தேர்வெழுதினர். உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, 7 பேர் தேர்வெழுதினர்.

முதல் நாளான இன்று கட்டுரைத் தாள் தேர்வு நடைபெற்றது. 30ஆம் தேதி காலை இரண்டாம் தாளான பொது அறிவு 1 தேர்வு நடைபெறும். அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாளான பொது அறிவு 2 தேர்வு நடைபெறும். 31ஆம் தேதி காலை நான்காம் தாளான பொது அறிவு 3 தேர்வு நடைபெறும். பிற்பகலில் 5ம் தாளான பொது அறிவு 4 தேர்வு நடைபெறும். நவம்பர் 1ஆம் தேதி இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கில தேர்வு நடைபெறும். நவம்பர் 3ஆம் தேதி காலை விருப்பப் பாடம் முதல் தாள், மாலை விருப்பப் பாடம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில், ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 24 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக