திங்கள், 27 நவம்பர், 2017

திருப்பதி லட்டு - விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு?

திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டின் விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை வந்து வணங்கிச் செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. காலம் காலமாக இந்த பிரசாதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது.

இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10-க்கு 2 லட்டுகளும், ரூ.25-க்கு 1 லட்டு என கூடுதலாக வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாத வழங்கப்படுகின்றன.

இதுதவிர ரூ.300க்கான டிக்கெட்டை ஆன்லைனில் செலுத்தும்போதே கூடுதல் லட்டுக்கும் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டு அதற்குரிய பிரிண்ட் அவுட்டை கொடுத்தாலும் அதற்குரிய இடத்தில் லட்டு கிடைக்கும்.

இப்படி திருப்பதி என்றால் மொட்டை மட்டுமல்லாது லட்டு முக்கிய பங்கு அளிக்கிறது. அந்த லட்டின் விலையை உயர்த்த நிதி துறையானது திருப்பதி தேவஸ்தானத்துக்கு பரிந்துரைத்துள்ளது. சலுகை விலையில் வழங்கப்படுவதால் லட்டு தயாரிப்பில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட விலை உயர்வு அவசியம் என்று அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவாகிறதாம். ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் லட்டு விநியோகத்தை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றால் விலை உயர்வு செய்தால் மட்டுமே முடியும் என்று நிதிதுறை பரிந்துரைத்துள்ளது.

ஏற்கெனவே லட்டு பிரசாதத்தால் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் முன்பிருந்த அறங்காவலர் குழுவினர் லட்டு விலையை உயர்த்தினால் பக்தர்களின் கோபத்துக்கு உள்ளாவோம் என்பதால் அப்படியே விலை ஏற்றாமல் இருந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்ட ஓராண்டுக்கு மேல் ஆகிறதால் தொடர்ந்து அதிகாரிகள் தலைமையில் நிர்வாகம் நடைபெறுகிறது.

அரசு அனுமதியுடன் லட்டு விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக