சனி, 25 நவம்பர், 2017

டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர்  21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நவம்பர் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வாக்காளர் பட்டியல் வெளியீடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை நடத்தியபின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்படும்போது அங்குள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை வாக்காளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

*வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: நவம்பர் 27
*வேட்புமனு தாக்கல் முடிவு     : டிசம்பர் 4 
*வேட்புமனு பரிசீலனை          : டிசம்பர் 5
*வேட்புமனு வாபஸ்                  : டிசம்பர் 7
*வாக்குப்பதிவு                               : டிசம்பர் 21
*வாக்குஎண்ணிக்கை                  : டிசம்பர் 24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக