புதன், 8 நவம்பர், 2017

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன்?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ந் தேதி செய்தி வெளியீட்டின் மூலம் பல்வேறு காரணிகளை முன்னிட்டு குரூப்-4ல் அடங்கிய பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கான தெரிவுகளை ஒரே தேர்வின் மூலம் தேர்வு செய்வது என்ற முடிவினை வெளியிட்டது.


இது குறித்து கிராம நிர்வாக சங்க மாநில தலைவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து தேர்வாணையம் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

கிராம நிர்வாக அலுவலர், பதவிக்கான வயது வரம்பில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இப்பதவிக்கான குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்கின்ற விதியே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மேலும் குரூப்-4ல் அடங்கியுள்ள பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான வயது மற்றும் இதர தகுதிகளில் மாற்றம் ஏதுமில்லை. போட்டித்தேர்வு மட்டுமே ஒரே தேர்வாக நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒருபங்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளனர். மூன்றில் இருபங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றவர்களாவர். மேலும் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரையில் ஒருமுறை நிரந்தரப்பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் 5 வருடங்கள் அப்பதிவினை பயன்படுத்தி அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இத்தகைய சூழலில் இத்தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதற்கு பெருந்தொகை அரசால் செலவிடப்படுகிறது. ஆகையால் இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்துவதன் மூலம் அரசிற்கு சுமார் 15 கோடி வரை செலவு தவிர்க்கப்படுவதுடன், காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட ஏதுவாகிறது.

பல்வேறு நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பலதரப்பட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வாணையம் ஒரே தேர்வு முறையினை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக