செவ்வாய், 9 மே, 2017

'நீட்' தேர்வுபடியே சேர்க்கை : மருத்துவ கவுன்சில் திட்டவட்டம்.

நாடு முழுவதும், 'நீட்' தேர்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. 2015ல், 'நீட்' தேர்வில் தில்லுமுல்லு நடந்ததால், இரண்டு முறை தேர்வு நடத்தப்பட்டது. எனவே, முறைகேடுகளை தடுக்க, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் நடந்த தேர்வில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
 
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும், 103 நகரங்களில், 1,921 மையங்களில், தமிழ் உட்பட, 10 மொழிகளில், 'நீட்' தேர்வு நடந்தது. இதற்கு, 11.38 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 95 சதவீதம் பேர் பங்கேற்றனர். 
 
இந்த தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., தான் நடத்துகிறது. அதை நடத்தி கொடுக்கும் அமைப்பாக, சி.பி.எஸ்.இ., உள்ளது. தேர்வு முடிவுகள், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்படும். பின், மாணவர் சேர்க்கை விதிகளை, மருத்துவ கவுன்சில் வெளியிடும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 65 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., மற்றும் 25 ஆயிரம் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வின்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பில், அனைத்து மாநிலங்களுக்கும், 'நீட்' தேர்வுப்படி, மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்கு, விலக்கு அளிக்கப்படவில்லை என்பது, உறுதி ஆகியுள்ளது.மேலும், எம்.சி. ஐ.,யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 'நீட்' தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்படுவர். அந்த பட்டியல், எம்.சி.ஐ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக