திங்கள், 8 மே, 2017

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு!!!

தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மே-8 ஆம் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதல்நாள் சிறப்பு பிரிவினருக்காக அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பின்,நாளை மறுநாளான மே-9ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி மே-11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. குறிப்பாக மே-11 ஆம் தேதி எம்.எடி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறயிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு, தமிழக கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்குக் கிடைக்கும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அவர்களுக்கும் நீட் தேர்வு எழுதவும் ஆணை பிறப்பித்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தொடுத்த வழக்கில், நேற்று மே-6ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது, சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி, கடினமான பகுதிகளில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மட்டும் 10 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை மதிப்பெண்கள் வழங்கலாம் என தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது.

மேலும் தமிழக அரசு வறண்ட, கடினமான நிலவியல் கிராமங்களைப் பிரித்துக் கொண்டு, அதில் பணிபுரிந்தவர்களுக்கு அதிகபட்சமாக 30 சதவிகித மதிப்பெண்கள் வழங்கலாம் என உத்தரவிட்டது, சென்னை உயர்நீதிமன்றம்.

பின் இதனடிப்படையில் உடனடியாக, நீட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் கடினமான கிராமங்களில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையிலும், தமிழக அரசு பணிபுரிந்த மருத்துவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி, தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. அந்த தரவரிசையின்படி, மே-8 ஆம் தேதியான நாளைமுதல், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இக்கலந்தாய்வு தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக