ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ரூ.10 நாணயங்கள் பயன்பாடு: அரசு புது உத்தரவு.


'அரசு பஸ்கள், ரேஷன் கடைகள் மற்றும் மின் கட்டண வசூல் மையங்களில், 10 ரூபாய் நாணயங்களை, பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுக்கக் கூடாது' என்று, தமிழக அரசின் நிதித்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி, கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். 
வதந்தி
இதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. பின், புதிய, 2,000 மற்றும் 500 நோட்டுகளை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.


இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வதந்தி கிளம்பியது. வாங்க மறுப்புபொதுமக்கள் அதிகம் புழங்கும் மார்க்கெட், பஸ், ஓட்டல்களில், 10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கப்பட்டது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்தும், இந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை.


குறிப்பாக, அரசு பஸ்கள் மற்றும் வங்கிகளில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால், மக்களும் வாங்க மறுத்தனர். இது குறித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, நாணயங்களை எண்ண காலதாமதம் ஏற்படுவதால், அதை வாங்க மறுத்தது தெரியவந்தது. 
இந்நிலையில், தமிழக அரசின் நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பொதுமக்கள் புழங்கும் அனைத்து அரசு தொடர்பான அலுவல்களுக்கும், 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ளுமாறு, ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல இயக்குனர் கேட்டுக் கொண்டு
உள்ளார்.

முற்றுப்புள்ளி

எனவே, பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ள அரசு துறைகள், அதாவது அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம், மின் கட்டணங்கள் வசூல், ரேஷன் கடைகள் ஆகியவற்றில், பொதுமக்கள் தரும், 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம், பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீங்குவதுடன், அது தொடர்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக