வெள்ளி, 7 ஏப்ரல், 2017

பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற
 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
 
தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும்,
 2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த
 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி 
முடிவடைந்தது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி 
31-ந்தேதி முடிந்தது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வது முதல்
 9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று
 வருகிறது.

கோடை விடுமுறை

உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதி 
இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது. 
21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை 
விடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசு 
தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33 
ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு 
தேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசி வேலைநாளாக உள்ளது. 
இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடை விடுமுறையாகும்.

கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி 
பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் சனி அல்லது
 ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப்படும். 
எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும்
 ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால் 
பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? என்று 
அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ்-1 வகுப்புகள் 
அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன்
 15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு 
பின் பள்ளிகள் திறக்கும் தேதியும், பிளஸ்-1 வகுப்பு தொடங்கும் 
தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக