வியாழன், 6 ஏப்ரல், 2017

அண்ணா பல்கலையின்,இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயமாகிறது .

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவர். இதற்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை செயலர், பேராசிரியர், இந்துமதி தலைமையிலான குழுவினர், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.'ஆன்லைனில்' குழப்பம் இன்றி, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய, 'சாப்ட்வேர்' தயார் செய்யப்பட்டுள்ளது. இதை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோர், மேற்பார்வையிட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்ஜி., கவுன்சிலிங்கில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாகிறது. 

இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.மத்திய அரசின், தேசியக் கல்வி சான்றிதழ் களஞ்சியம் என்ற, டிஜிட்டல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு இன்ஜி., மாணவரின் சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலையை, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.மேலும், கல்வி உதவித்தொகை பெறவும், ஆதார் எண் சேகரிக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விபரங்கள் உண்மையா என ஆய்வு செய்ய, ஆதார் எண் தேவை.இதன்படி, இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக