புதன், 5 ஏப்ரல், 2017

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் : 'சென்டம்' வழங்க கடும் கட்டுப்பாடு.

பத்தாம் வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது. இதில், 10.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 
விடைத்தாள் திருத்தம், மாநிலம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட முகாம்களில், பல்வேறு மையங்களில், ஏப்., 1ல் துவங்கியது. முதலில் தமிழ், ஆங்கிலம் மொழி பாடத்திற்கு விடைத்தாள் திருத்தம் துவங்கியது. 
முதல் இரண்டு நாட்கள், தலைமை விடை திருத்துனர் மூலமும், பின், உதவி திருத்துனர்கள் மூலமும், விடைகள் திருத்தம் செய்யப்படுகிறது.மொழி பாடத்தில், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கப்பட்டால், அதற்கு இரண்டு வகை, மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. முதன்மை தேர்வாளரும், பின் முகாம் அலுவலரும், பின், முதலில் விடைத்தாளை திருத்தியவரை தவிர, வேறு இரு ஆசிரியர்கள் மூலமும், ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
 
அதன் பின்னும், ஒரு மாணவர் சென்டம் எடுத்தால், அந்த விடைத்தாள், சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு, கண்காணிப்பு கமிட்டி மூலம், மறு ஆய்வு செய்த பின், மதிப்பெண் இறுதி செய்யப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள், கல்வியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.'மதிப்பீடு சரியாக இருந்தால் தான், அடுத்தகட்டமாக, மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகளும் சரியாக இருக்கும்' என, பெற்றோரும் தெரிவித்துள்ளனர். 
அதே நேரம், விடை திருத்தத்தில் மறுமதிப்பீடு, மதிப்பெண் இன்றி பக்கம் விடுபடுவது போன்ற குளறுபடிகள் இன்றி, விடை திருத்தம் நடக்குமா என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

ஆர்வம் காட்டாத அரசு ஆசிரியர்கள் : பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விடுப்பு எடுத்து, அவர்கள் விடை திருத்தத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து, பணியிட மாற்றம், பணியில் கவனமின்மை என, பல புகார்களில், 'மெமோ' கொடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக