திங்கள், 15 மே, 2017

'எய்ம்ஸ்' அமைவது எங்கே? : தமிழக அரசு விளக்கம்.

கோவை: 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2015ல், தமிழகம், உட்பட நான்கு மாநிலங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. இதில், தமிழகம் தவிர, பிற மாநிலங்களில் இடத்தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கின. தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்கள், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. 2015 ஏப்ரலில், மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், தேர்வு செய்த இடங்களை ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்து, 23 மாதங்களாகியும், எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், ராஜ்யசபா, எம்.பி.,க்கள் குழுவினர், நேற்று கோவை வந்தனர். தமிழகத்தில், எய்ம்ஸ் அமைப்பது குறித்து, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
 
தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும், மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது,'' என்றார். 
 
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறியதாவது:
ராஜ்யசபா, எம்.பி.,க்கள் குழுவினர், தமிழக அரசு சுட்டிக் காட்டிய, ஐந்து இடங்களில், தகுதியான, மூன்று இடங்கள் குறித்த தகவல்களை, பரிசீலனை செய்தனர். தமிழக அரசின் தகவல்கள், குழுவினருக்கு திருப்தி அளித்துள்ளது. விரைவில், தமிழகத்தில், எய்ம்ஸ் அமையும் இடம் குறித்து, அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக